கர்ப்பமாக்கியதாக பெண் புகார் அளித்ததால் சிறுவன் விஷம் குடித்தார்; அண்ணனுக்கு வலைவீச்சு


கர்ப்பமாக்கியதாக பெண் புகார் அளித்ததால் சிறுவன் விஷம் குடித்தார்; அண்ணனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 July 2019 10:15 PM GMT (Updated: 9 July 2019 6:52 PM GMT)

மன்னார்குடி அருகே கர்ப்பமாக்கியதாக பெண் புகார் அளித்ததால் மனமுடைந்த சிறுவன் விஷம் குடித்தான்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் தேவி(வயது20).(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). தேவி நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து தான் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தனது கருவை கலைக்க வேண்டும் என கூறினார். இதுகுறித்து மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று தேவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தன்னை பரவாக்கோட்டை தோப்புதெருவை சேர்ந்த சாமியப்பன்(20) மற்றும் அவரது சகோதரரான 16 வயது சிறுவன் ஆகியோர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை உல்லாசமாக இருந்ததாகவும் இதனால் தான் தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளதாக கூறினார்.

விஷம் குடித்தார்

சாமியப்பன் மற்றும் அவரது சகோதரரான 16 வயது சிறுவன் மீது தேவி மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சாமியப்பன் மற்றும் அவரது சகோதரரான 16 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்ததை அறிந்த சாமியப்பனின் 16 வயது சகோதரர் மனமுடைந்து வீட்டில் விஷம் குடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாமியப்பன் வெளியூரில் உள்ளதால் அவரை போலீசார் தேடி வருகிறார்கள். கர்ப்பமாக்கியதாக பெண் புகார் அளித்ததால் மனமுடைந்த சிறுவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story