சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவு


சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவு
x
தினத்தந்தி 9 July 2019 11:00 PM GMT (Updated: 9 July 2019 8:42 PM GMT)

சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவில்,

நெல்லை மாவட்டம் கூத்தங்குழி கிராமத்தை சேர்ந்த நாட்டு படகு மீனவர்களுக்கும், குமரி மாவட்ட சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் நாட்டு படகில் இருந்த மீனவர் டிலைட்(வயது 50) என்பவர் கடலில் விழுந்து பலியானார்.

இதுதொடர்பாக மீனவர்கள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க, சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

கலெக்டர் உத்தரவு

இந்த நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமையில் சின்னமுட்டம் மீனவ பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான விசைப்படகு மீனவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் தளவாய்சுந்தரம் மற்றும் சின்னமுட்டம் மீனவர்கள் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்தனர்.

மீனவர் பிரச்சினை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கையை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என உத்தரவிட்டார்.

Next Story