திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைக்க பெரும் போராட்டம்


திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைக்க பெரும் போராட்டம்
x
தினத்தந்தி 10 July 2019 11:00 PM GMT (Updated: 10 July 2019 7:10 PM GMT)

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். புகைமூட்டத்தால் 3-வது நாளாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தனியார் பள்ளி மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 47 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு உள்ளது. திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள 65 வார்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் சுமார் 400 டன் குப்பைகள் இந்த குப்பை கிடங்கில்தான் கொட்டப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததால் மலைபோல குப்பை தேங்கி கிடந்தது.

அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றி, அங்கு பூங்கா உள்ளிட்டவை அமைக்க ரூ.47 கோடி ஒதுக்கப்பட்டது. அத்திட்டத்திற்கு ‘பயோ மைனிங் திட்டம்’ என பெயரிடப்பட்டது. அத்திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதற்கிடையே ஆண்டு கணக்கில் அங்கு குப்பை கிடப்பதால், அவை காய்ந்து கிடந்தது.

கடந்த 8-ந் தேதியன்று காலை அரியமங்கலம் குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தீயானது குப்பைகளில் பரவலாக பற்றி திமு..திமு என எரிந்தது. தீ விபத்தால் 8-ந் தேதி முதல் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால், திருச்சி-தஞ்சை சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் புகை மூட்டம் ஏற்பட்டது. மேலும் குடியிருப்பு வீட்டுக்குள்ளும் புகை மூட்டம் புகுந்ததால், குப்பை கிடங்கையொட்டி உள்ள வீடுகளில் குடியிருப்பவர்கள் வீட்டை காலி செய்து விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக 5 வண்டிகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று 3-வது நாளாகவும் காற்றின் வேகத்தால் தீ மேலும் பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. கூடுதலாக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. மேலும் திருச்சி மட்டுமின்றி பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக 10 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சி சார்பில் 15 லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், காற்றின் வேகத்திற்கு தீ மேலும் பரவியதே தவிர, அதனை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். குப்பை கிடங்கு அருகில் ஆம்புலன்சும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் முயற்சியின்போது அதிக அளவில் புகை வெளியேறி மீண்டும் புகை மண்டலம் ஆனது. இதனால், அரியமங்கலம் குப்பை கிடங்கு பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் 3-வது நாளாக பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். நேற்றும் அவர்கள் தங்களது வீடுகளுக்கு குடியேற முடியாமல் தவித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வணிக வளாகத்தில் உள்ள கடை உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டு மூடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அரியமங்கலம் குப்பை கிடங்கு பகுதிக்கு இனி குப்பைகள் கொண்டுவரும் லாரிகளை அனுமதிக்க மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ மற்றும் புகை மூட்டத்தால் சுவாச கோளாறு, அலர்ஜி, தோல் நோய் உள்ளிட்டவற்றால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட வேண்டும் என்பதும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Next Story