ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து


ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 10 July 2019 11:00 PM GMT (Updated: 10 July 2019 7:49 PM GMT)

நெற்குன்றத்தில், ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

பூந்தமல்லி,

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 58). இவர், நெற்குன்றத்தில் ஜெராக்ஸ் கடை வைத்து உள்ளார். இந்த கடையின் ஒரு பகுதியில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வந்தது. தினமும் இரவு நேரத்தில் கடையை பூட்டும்போது ஏ.டி.எம். மையத்தையும் முத்துகிருஷ்ணன் மூடிவிட்டு சென்றுவிடுவார். காலையில் விரைவில் வந்து ஏ.டி.எம். மையத்தை திறந்து வைப்பது வழக்கம்.

நேற்று காலை வழக்கம்போல் ஏ.டி.எம். மையத்தை திறந்துவிட்டு அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு மற்றும் அசோக்நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஏ.டி.எம். மையத்தில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் ஏ.டி.எம். எந்திரத்தின் ஒரு பகுதி மற்றும் ஜெராக்ஸ் கடையில் இருந்த 4 ஜெராக்ஸ் எந்திரங்கள், 2 கம்ப்யூட்டர்கள், மேஜை, நாற்காலி ஆகியவை எரிந்து நாசமானது. சம்பவம் பற்றி தகவல் அறிந்துவந்த தனியார் வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.4½ லட்சத்தை எடுத்து சென்றனர். தீ விபத்தில் பணத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story