பணி நிரந்தரம் செய்யக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பணி நிரந்தரம் செய்யக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2019 11:00 PM GMT (Updated: 11 July 2019 7:14 PM GMT)

காரைக்கால் மாவட்டத்தில் அங்கன்வாடியில் 3 ஆண்டுகள் பணிமுடித்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்,

3 ஆண்டுகள் பணி முடித்த அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் பழைய ரெயில் நிலையம் அருகில் அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் முத்துலெட்சுமி தலைமை தாங்கினார். காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், பொதுச்செயலாளர் ஷேக்அலாவுதீன் ஆகியோர் பேசினர். சங்க செயலாளர் பாகிரதி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி அளவை குறைத்து வருகிறது. நிதி அளவு குறைக்கப்படுவதால் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறைந்து கொண்டே வருகிறது. எனவே மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி அளவை குறைக்காமல் அதிகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலியாக உள்ள நிரந்தர அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் பதவிகளில் 3 ஆண்டுகள் பணிமுடித்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் மாத இறுதியில் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் பொருளாளர் வாணி நன்றி கூறினார்.

Next Story