செங்கீரை, அம்மாச்சத்திரம் அய்யனார், காசிவிஸ்வநாதர் கோவில்களில் கும்பாபிஷேகம்


செங்கீரை, அம்மாச்சத்திரம் அய்யனார், காசிவிஸ்வநாதர் கோவில்களில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 11 July 2019 10:30 PM GMT (Updated: 11 July 2019 7:48 PM GMT)

செங்கீரை, அம்மாச்சத்திரத்தில் உள்ள அய்யனார், காசிவிஸ்வநாதர் கோவில்களில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், செங்கீரை கிராமத்தில் தலக்காவுடைய அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் முன்னோடிக்கருப்பர், முன்னோடிக்கருப்பர், அரசுமுகம், சன்னாசி, சப்தகன்னிமார்கள், சுப்பிரமணியர், அடைக்கலம் காத்தார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் விழா தொடங்கியது. தொடர்ந்து 1, 2, 3 மற்றும் 4-ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை 9.30 மணிக்கு யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு மேள தாளம் முழங்க கோவிலை வலம் வந்தனர். பின்னர் காலை 10.15 மணிக்கு அய்யனார் கோவில் மூலஸ்தான விமான கலசம் மற்றும் முன்னோடிக்கருப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமான கலசத்திற்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை செங்கீரை முன்னோடிக்கருப்பர் கோவில் பங்காளிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

கும்பாபிஷேகம்

கீரனூர் அடுத்து அம்மாச்சத்திரத்தில் விசாலாட்சி அம்மன் சமேத காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி 1, 2 மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் காலை 10.10 மணிக்கு காசிவிஸ்வநாதர் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு சிவாச்சியார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். 

Next Story