நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் மீதான ரூ.581 கோடி மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்


நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் மீதான ரூ.581 கோடி மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 11 July 2019 10:30 PM GMT (Updated: 11 July 2019 8:25 PM GMT)

களியக்காவிளை அருகே நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் மீதான ரூ.581 கோடி மோசடி செய்த வழக்கில் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை நிர்மலன் என்பவர் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வாடிக்கையாளர்களாக சேர்ந்து பணத்தை டெபாசிட் செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு நிதி நிறுவனத்தை மூடிவிட்டு நிர்மலன் தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் நாகர்கோவிலில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்த ரூ.581 கோடி பணத்தை மோசடி செய்து விட்டு நிர்மலன் தலைமறைவானது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

8,426 புகார்கள்

இதனையடுத்து ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் தனித்தனியாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த வகையில் மொத்தம் 8 ஆயிரத்து 426 பேர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் நிர்மலன் உள்பட மொத்தம் 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். நிதி நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் நகை உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே தலைமறைவாக இருந்த நிர்மலன் மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும் திருவனந்தபுரம் போலீஸ் அதிகாரிகளும் நாகர்கோவில் வந்து நிர்மலனிடம் விசாரணை நடத்தினர். அப்போது நிர்மலன் மோசடி செய்த பணத்துக்கு சொத்துகள் வாங்கியது தெரிய வந்தது.

குற்றப்பத்திரிகை

அதன்பிறகு அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தற்போது போலீசார் தாக்கல் செய்துள்ளனர். மேலும் நிர்மலனின் சொத்துகள் பற்றிய விவரங்களையும் தாக்கல் செய்து இருக்கிறார்கள். ஏற்கனவே தனது சொத்துகளை விற்று மோசடி செய்த பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திரும்ப கொடுப்பதாக போலீசாரிடம் நிர்மலன் கூறியிருந்தார். எனவே அவரது சொத்துகளை விற்று வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துமாறு கோர்ட்டு உத்தரவிட வாய்ப்புகள் உள்ளன என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story