விருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை, அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன - மகசூல் பாதிக்கும் அபாயம்


விருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை, அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன - மகசூல் பாதிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 12 July 2019 10:30 PM GMT (Updated: 12 July 2019 6:49 PM GMT)

விருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராய் இருந்த நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்தன இதனால் மகசூல் பாதிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

விருத்தாசலம், 

விருத்தாசலம் பகுதியில் விவசாயிகள் தற்போது குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சாகுபடி பணியை பொறுத்தவரை முழுவதும் ஆழ்துளை கிணறுகளை சார்ந்தே விவசாயிகள் மேற் கொண்டு வருகின்றனர். 90 நாட்கள் பயிரான குறுவை நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து, கதிர் பிடித்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக விருத்தாசலம் பகுதியில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சுமார் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் கூறுகையில், தற்போது கடுமையான வறட்சி நிலவினாலும், ஆழ்துளை கிணற்றில் இருந்த நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடியை செய்தோம். பயிர்களும் நன்கு செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. விரைவில் அறுவடை பணியை தொடங்க இருந்தோம். ஆனால் நேற்று முன்தினம் பெய்த மழையால் பயிர்கள் அனைத்தும் நிலத்தில் சாய்ந்துவிட்டது. தொடர்ந்து நிலத்தில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்து வருகிறோம். அதே நேரத்தில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடப்பதால், எந்திரங்களை கொண்டு எங்களால் அறுவடை செய்ய முடியாது. இதனால் ஆட்களை கொண்டே அறுவடை பணியை செய்திட முடியும். அவ்வாறு செய்தாலும் நெற்கதிர்கள் உதிர்ந்து போகும் சூழ்நிலை தான் ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் பாதியாக குறையவும் வாய்ப்பு உள்ளது. விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கம்மாபுரம் பகுதி யில் மட்டும் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இதுபோன்று பயிர்கள் சேதம டைந்து இருக்கலாம் என்று அவர் கவலையுடன் தெரிவித்தார்.

Next Story