குதிரை துலுக்குதல் நிகழ்ச்சியுடன் சணபிரட்டி செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடங்கியது


குதிரை துலுக்குதல் நிகழ்ச்சியுடன் சணபிரட்டி செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடங்கியது
x
தினத்தந்தி 13 July 2019 10:30 PM GMT (Updated: 13 July 2019 7:27 PM GMT)

10 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை துலுக்குதல் நிகழ்ச்சியுடன் சண பிரட்டி செல்லாண்டியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா தொடங்கியது. இதில் பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர்.

கரூர்,

கரூர் அருகேயுள்ள சணபிரட்டி எனும் கிராமம் முன்பு “நரசிம்ம சமுத்திரம்” என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் “சின்னப்ப ரெட்டி” என்பவரால் அங்கு துணை ரெயில் நிலையம் அமைக்கப்பட்டது. இதன் நினைவாக சின்னப்ப ரெட்டி என அந்த கிராமத்தின் பெயரை அழைத்தனர். நாளடைவில் அது மருவி சணபிரட்டி என்றாகிவிட்டதாக அந்த கிராமத்திலுள்ள மூத்தகுடிமக்கள் சிலாகித்து கூறுகின்றனர். இந்த கிராமத்தில் அமராவதி ஆற்றங்கரையைஒட்டியபடி 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் சந்தனக்கருப்பண்ண சாமி கோவில் உள்ளது. அமராவதி ஆற்றில் மீன்பிடித்தொழில் முன்பு நடந்த போது அப்போது அந்த வலையில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த செல்லாண்டியம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடந்தன. இதில் அம்மன், குதிரை மேல் புகுந்து சிலிர்த்தெழுந்து வந்து கோவிலில் குடிபுகுந்தால் தான் விழா நடத்தப்படும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை 4.45 மணியளவில் சணபிரட்டி, பசுபதிபாளையம், ராமகவுண்டனூர், வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர், மூலகாட்டானூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பல்வேறு சமுதாய கிராம மக்கள் கோவில் முன்பு திரண்டனர். பின்னர் குதிரை துலுக்குதல் நிகழ்ச்சியையொட்டி கோவில் முன்பு பூஜை செய்து குதிரை ஒன்றை அழைத்து கொண்டு ஊரின் எல்லையிலுள்ள வில்வமரத்து பூமியில் நிற்க வைத்தனர். அப்போது குதிரை சிலிர்த்து கொண்டு எப்போது விழா நடத்த அனுமதி கொடுக்கும் என பக்தியுடன் மக்கள் எதிர்நோக்கி காத்து கொண் டிருந்தனர்.

பின்னர் இரவு 8.35 மணியளவில் அந்த குதிரை சிலிர்த்து கொண்டு கோவிலை நோக்கி புறப்பாடு அடைந்தது. அப்போது அந்த குதிரையில் அம்மன் புகுந்து விட்டதாக எண்ணி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பின்னர் நள்ளிரவு 12.10 மணியளவில் கோவிலை குதிரை வந்தடைந்த போது, அம்மனே வந்து விழா நடத்த உத்தரவு கொடுத்து விட்டதாக பக்தர்கள் கருதி மகிழ்ச்சியடைந்தனர். அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. வருகிற 16-ந்தேதி அம்மன் ரதம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து 17-ந்தேதி திருத்தேர் புறப்பாடும், 18-ந்தேதி மறுதேர் புறப்பாடும் நடக்கிறது. அப்போது சணபிரட்டி, பசுபதிபாளையம் உள்ளிட்ட ஊர்கள் வழியாக தேர் இழுத்து வரப்படுகிறபோது கிடாவெட்டு, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வருகிற 19-ந்தேதி அம்மன் குடிபுகுதல், வாண வேடிக்கையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர். 

Next Story