குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்


குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்
x
தினத்தந்தி 13 July 2019 10:15 PM GMT (Updated: 13 July 2019 7:40 PM GMT)

குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரிமங்கலம், 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் கோவிலூர் ஊராட்சியில் கோவிலூர், சென்றாயனஅள்ளி, பூனத்தனஅள்ளி, பூனத்தனஅள்ளிபுதூர், கொத்தடிமை காலனி, மொளப்பனஅள்ளி, சிட்டம்பட்டி, கனிகானூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்களுக்கு கிராமம் தோறும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து கோவிலூரில் அமைக்கப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி மூலமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் அனைத்து கிராமங்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வறட்சி காரணமாக இப்பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் குடிநீரை நம்பியே பொதுமக்கள் உள்ளனர். ஆனால் சிட்டம்பட்டி, கனிகானூர் ஆகிய 2 கிராமங்களுக்கு கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று காலிக்குடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் சீரான குடிநீர் வழங்கக்கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story