ஈரோட்டில் கடத்தப்பட்ட சிறுமி 7 மாதங்களுக்கு பிறகு மீட்பு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


ஈரோட்டில் கடத்தப்பட்ட சிறுமி 7 மாதங்களுக்கு பிறகு மீட்பு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 July 2019 10:30 PM GMT (Updated: 13 July 2019 8:09 PM GMT)

ஈரோட்டில் கடத்தப்பட்ட சிறுமி 7 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டார். அவரை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமானார். அந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், தங்களது மகளை வாலிபர் ஒருவர் கடத்தி சென்றுவிட்டதாகவும், கண்டுபிடித்து தரும்படியும் கூறிஇருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் குமாரபாளையத்தை சேர்ந்த கணேஷ் என்பவருடைய மகன் வேல்முருகன் (வயது 21), சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த வேல்முருகனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் வேல்முருகன் அந்த சிறுமியுடன் லக்காபுரம் பஸ் நிலையத்தில் நிற்பதாக ஈரோடு மகளிர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று வெளியூருக்கு தப்பி செல்ல தயாராக இருந்த வேல்முருகனை கைது செய்தனர். மேலும், அந்த சிறுமியையும் போலீசார் 7 மாதங்களுக்கு பிறகு மீட்டனர். இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட வேல்முருகன் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story