கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினர் மோதல்; நாற்காலிகள் உடைப்பு கும்பகோணம் அருகே பரபரப்பு


கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினர் மோதல்; நாற்காலிகள் உடைப்பு கும்பகோணம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 13 July 2019 10:45 PM GMT (Updated: 13 July 2019 9:26 PM GMT)

கும்பகோணம் அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.- அ.ம.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நாற்காலிகள் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை, திருப்புறம்பியம், உடையாளூர், தாராசுரம் ஆகிய ஊர்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நிர்வாகக்குழு தேர்தல் நேற்று நடந்தது. இதில் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்தனர். கும்பகோணம் அருகே உடையாளூரில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் அதிகாரியாக தமிழ்ச்செல்வி நியமிக்கப்பட்டு இருந்தார்.

வாக்குப்பதிவையொட்டி அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் உடையாளூர் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு திரண்டு நின்றனர். கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் மகாதேவன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

மோதல்; நாற்காலிகள் உடைப்பு

இந்த நிலையில் வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி அ.தி.மு.க.வினருக்கும், அ.ம.மு.க.வினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த நாற்காலிகள் அடித்து உடைக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் இரண்டு கட்சிகளையும் சேர்ந்தவர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனிடையே அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் தேர்தலை ஒத்தி வைக்கும்படி தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரி தமிழ்ச்செல்வி, மறு தேதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இதுதொடர்பான நோட்டீஸ் சங்கத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

போலீசில் புகார்

இதனிடையே உடையாளூர் அக்ரஹாரம் கீழத்தெருவை சேர்ந்த பரணி என்பவர் பட்டீஸ்வரம் போலீசில், கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக தன்னை சிலர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

Next Story