கோவையில் பா.ஜனதாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


கோவையில் பா.ஜனதாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 July 2019 9:30 PM GMT (Updated: 13 July 2019 9:30 PM GMT)

பாரதீய ஜனதாவை கண்டித்து கோவையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை,

பாரதீய ஜனதா கட்சியின் குதிரைபேர அரசியலை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவின்பேரில், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்றுக்காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், மாநில துணைத் தலைவர் எம்.என்.கந்தசாமி, மாநில பொதுச் செயலாளர் வீனஸ்மணி, முன்னாள் புறநகர் மாவட்ட தலைவர் கே.எஸ்.மகேஷ்குமார், மாவட்ட பொருளாளர் சவுந்திரகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கணபதி சிவக்குமார், வக்கீல் கருப்பசாமி, திருமூர்த்தி, சி.வி.சி.குருசாமி, ராமநாகராஜ், கோவை போஸ், ஆர்.வி.எஸ். சக்தி, ஆர்.எஸ்.புரம் பாலு, அரோமா நந்தகோபால், துளசிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பிரதமர் நரேந்திரமோடியை கண்டித்து கோஷமிட்டனர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்த பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

பா.ஜனதாவை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்திபார்க் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வெள்ளிங்கிரி வரவேற்று பேசினார். சொக்கம்புதூர் கனகராஜ், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் பி.எஸ்.சரவணக்குமார், லாலிரோடு செல்வம், கோவை ஹனீபா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். இதில் மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ஜனநாயகத்தை அழிக்க துடிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பண பலத்தின் மூலமாகவோ, அதிகாரத்தின் மூலமாகவோ பா.ஜனதாவை அதிகாரத்தில் அமரவைத்து இந்தியா முழுவதும் சர்வாதிகார ஆட்சியை நிரந்தரமாக அமல்படுத்த நினைக்கிறது. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட எந்த திட்டமும் விவசாயிகளுக்கு மோடி அரசு செய்யவில்லை.

இந்திய பொருளாதாரம் மிகவும் பின்னோக்கி சென்று கொண்டுள்ளது. அதை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி கர்நாடகாவிலும், கோவாவிலும் ஜனநாயகத்தை கொன்று பா.ஜனதாவை அதிகாரத்திற்கு கொண்டு வர துடிக்கிறார். இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கோவை செல்வன், எச்.எம்.எஸ்.ராஜாமணி, அழகு ஜெயபால், சின்னராஜ், நவீன்குமார், ஜெரிலூயிஸ், கணபதி அசோக்குமார், பேரூர் மயில் உள்பட பலர் கலந்து கொண்டு பாரதீய ஜனதாவை கண்டித்து கோஷமிட்டனர்.

Next Story