கூடுதல் செயலாளர் பிரமோத்குமார் பதக் தலைமையில் தஞ்சையில் மத்திய குழுவினர் ஆய்வு நீர்நிலைகளையும் பார்வையிட்டனர்


கூடுதல் செயலாளர் பிரமோத்குமார் பதக் தலைமையில் தஞ்சையில் மத்திய குழுவினர் ஆய்வு நீர்நிலைகளையும் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 13 July 2019 11:00 PM GMT (Updated: 13 July 2019 10:00 PM GMT)

தஞ்சையில் மத்திய அரசின் கூடுதல் செயலாளர்கள் பிரமோத்குமார் பதக் தலைமையில் மத்திய குழுவினர் தஞ்சையில் ஆய்வு மேற்கொண்டு, நீர்நிலைகளையும் பார்வையிட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பிரமோத்குமார்பதக் தலைமையில் ஆய்வுக்குழு உறுப்பினர்களாக மத்திய அரசின் செயலாளர் பால்மிகிபிரசாத், கலைத்துறை இயக்குனர் கலாதரன், பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சைலாடைடஸ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் ராகுல்கஷ்யப், வேளாண்மைத்துறை இயக்குனர் சுதிர்குமார், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் டி.கே.சவுத்ரி உள்பட 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 10 தொழில்நுட்ப வல்லுனர்கள் என மொத்தம் 20 பேர் கொண்ட குழுவினர் நேற்று தஞ்சை வந்தனர்.

முன்னதாக இந்த குழுவினர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர். மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை மற்றும் மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பிரமோத்குமார்பதக் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

255 மாவட்டங்கள்

கூட்டத்தில் பிரமோத்குமார் பதக்கூறியதாவது:-

பிரதமர் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் ஜல் சக்தி அபியான் என்ற இயக்கத்தை தொடங்கி வைத்து செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடிய 255 மாவட்டங்களை நீர் வளமிக்க மாவட்டங்களாக மாற்றுவதற்காக மத்திய அரசில் இருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் குழு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களை மேம்படுத்திடவும், மழைநீர் சேகரிப்பினை அமைத்து நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கும் இக்குழு ஆய்வு செய்ய உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து சிறப்பான முறையில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர் நிலைகளில் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மற்றும் 2449 நீர் நிலைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் குறித்தும், தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு

தமிழக முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) சார்பில் நடைபெற்று வரும் பணிகளை சிறப்பான முறையில் விவசாய சங்கங்களுடன் இணைந்து செயல்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடையே மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல் படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

நீர்நிலைகளில் ஆய்வு

பின்னர் இந்த குழுவினர் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிக்கும் பிரிந்து சென்று ஆய்வு செய்தனர். தஞ்சையில் தோப்புக்குளம், சாமந்தான்குளம், அய்யன்குளம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். மேலும் தஞ்சை முனிசிபல் காலனியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம், மானம்புச்சாவடியில் உள்ள வீடில்லாதோருக்கான தங்குமிடம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

Next Story