4 வீடுகளுக்குள் புகுந்து கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் நகையுடன் தப்ப முயன்ற போது பொதுமக்கள் மடக்கினர்


4 வீடுகளுக்குள் புகுந்து கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் நகையுடன் தப்ப முயன்ற போது பொதுமக்கள் மடக்கினர்
x
தினத்தந்தி 14 July 2019 11:15 PM GMT (Updated: 14 July 2019 7:08 PM GMT)

கருங்கல் அருகே ஒரே நாள் இரவில் 4 வீடுகளில் கொள்ளையடித்து விட்டு தப்ப முயன்ற பிரபல கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

கருங்கல்,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 37), கொத்தனார். இவர், நேற்று முன்தினம் இரவு மனைவி, குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன், படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த சுரேஷ்குமாரின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்தான். அவர் சத்தம் போட்டதும் நகையுடன் தப்பி விட்டான். பிறகு அந்த கொள்ளையன் அருகே உள்ள கல்பொற்றவிளை கிராமத்திற்கு சென்று, ஜேம்ஸ் என்பவர் வீட்டின் கதவை உடைக்க முயன்றான். ஆனால், கதவை உடைக்க முடியாததால் அங்கு கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு, அடுத்த திருட்டை அரங்கேற்ற புறப்பட்டான்.

பின்னர் தொலையாவட்டம் தைக்காட்டுவிளை பகுதியை சேர்ந்த மரியதாஸ் (39) என்பவரின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன், மரியதாஸ் மனைவி ஷீபாமேரி அணிந்திருந்த 10½ பவுன் நகையை கட்டிங் பிளேடால் நைசாக வெட்ட முயன்றான். அப்போது, கண்விழித்த ஷீபா மேரி, மர்ம ஆசாமி நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த மரியதாஸ், கொள்ளையனை பிடிக்க முயன்றார். ஆனால், கொள்ளையன் அங்கிருந்து தப்பி, அந்த பகுதியில் ஏதோ ஒரு இடத்தில் பதுங்கினான். பொதுமக்களிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக சில மணி நேரம் அந்த இடத்தில் ஓய்வெடுத்தான்.

தொடர்ந்து அதிகாலையில் மீண்டும் கொள்ளையடிக்க கிளம்பினான். தொலையாவட்டம் குட்டிவிளை பகுதியை சேர்ந்த மனோன்மணி என்பவரது வீட்டின் கதவை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே புகுந்தான். அந்த வீட்டில் மனோன்மணியின் மனைவி சாந்தகுமாரி, அவரது தங்கை மற்றும் சாந்தகுமாரியின் மகன் பபீஷ் (20) ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர்.

கொள்ளையன் வீட்டிற்குள் நுழைந்ததும் டார்ச் லைட்டை அடித்தபடி வீட்டில் உள்ள பொருட்களை நோட்டமிட்டான். இதனை பபீஷ் கவனித்து விட்டார். கொள்ளையனை நைசாக பிடிக்க வேண்டும் என்று நினைத்த அவர், செல்போன் மூலம் கொள்ளையன் வீட்டுக்குள் புகுந்த விவரத்தை தன்னுடைய நண்பர்களுக்கு தெரிவித்தார். நண்பர்கள் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை திரட்டி பபீஷ் வீட்டை சுற்றி வளைத்தனர்.

அந்த சமயத்தில், வெளியே பொதுமக்களின் சத்தத்தை கேட்டதும் கொள்ளையன் சுதாரித்துக் கொண்டு நகை-பணத்தை அங்கேயே வைத்து விட்டு தப்பியோட முயன்றான்.

வீட்டை சுற்றி நின்ற பபீஷின் நண்பர்கள், பொதுமக்களுடன் இணைந்து கொள்ளையனை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்து, அவனுடைய சட்டை பையை சோதனை செய்த போது, அதில் 7 பவுன் நகை இருந்தது. அந்த நகை சுரேஷ்குமாரின் மனைவியிடம் பறித்த நகை என்பது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே கருங்கல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் இருந்து கொள்ளையனை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிடிபட்ட கொள்ளையன் நித்திரவிளை அருகே எஸ்.டி. மங்காடு புல்லானிவிளை பகுதியை சேர்ந்த எட்வின் ஜோஸ் (27) என்பது தெரியவந்தது. மேலும் ஒரே நாள் இரவில் 4 வீடுகளில் அட்டகாசம் செய்த விவரத்தையும் கொள்ளையன் போலீசிடம் தெரிவித்தான். மேலும் எட்வின் ஜோஸ் மீது கருங்கல், புதுக்கடை, களியக்காவிளை, கோட்டார் உள்பட மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளன.

எட்வின் ஜோசுடன் மற்றொரு நபரும் சேர்ந்து திருட வந்துள்ளான். ஆனால் அவன் நைசாக தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து எட்வின் ஜோசை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

ஒரே நாள் இரவில் 4 வீடுகளில் புகுந்து கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story