சேலத்தில் கண்களில் துணிகளை கட்டிக்கொண்டு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் கண்களில் துணிகளை கட்டிக்கொண்டு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 July 2019 11:00 PM GMT (Updated: 14 July 2019 9:04 PM GMT)

சேலத்தில் அறநிலையத்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் கண்களில் துணிகளை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

இந்து முன்னணி சார்பில் அறநிலையத்துறையை கண்டித்து மாநிலம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து முன்னணி சார்பில் இந்து கோவில்களையும், கோவில் சொத்துக்களையும் பராமரிக்க இந்து சமய சான்றோர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் இந்து இயக்க பிரதிநிதிகளை கொண்ட தனி வாரியம் அமைத்து சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்து கோவில் நிலம் மற்றும் கடைகளை மற்ற மதத்தினருக்கு வழங்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். மாநகர துணைத்தலைவர்கள் குணசேகரன், செந்திரைய்யர், பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கோபிநாத் உள்பட ஏராளமானோர் தங்களது கண்களில் துணிகளை கட்டிக்கொண்டு கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், இந்து கோவில்களில் பக்தர்களிடம் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

பக்தர்களின் காணிக்கை

இதுகுறித்து இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், இந்துக்களின் கோவில் நிலங்கள் மற்றும் கடைகளை, மற்ற மதத்தினருக்கு வழங்க கூடாது. ஏற்கனவே கொடுக்கப்பட்டவைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை கோவில் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு மட்டும் பயன்படுத்தாமல், இந்துக்களின் கலாசாரம், பண்பாடு, ஆன்மிக வகுப்பு, கல்வி மற்றும் மருத்துவத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தற்போது கண்களில் துணிகளை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றார்.

Next Story