“தினத்தந்தி” செய்தி எதிரொலி: திட்டச்சேரியில் குளம் தூர்வாரப்பட்டது


“தினத்தந்தி” செய்தி எதிரொலி: திட்டச்சேரியில் குளம் தூர்வாரப்பட்டது
x
தினத்தந்தி 15 July 2019 9:30 PM GMT (Updated: 15 July 2019 8:39 PM GMT)

“தினத்தந்தி” செய்தி எதிரொலியாக திட்டச்சேரியில் குளம் தூர்வாரப்பட்டது.

திட்டச்சேரி, 

நாகை மாவட்டம் திட்டச்சேரி - திருமருகல் மெயின் சாலையில் பச்சான் தோப்பு தெரு உள்ளது. இந்த தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதன் அருகே கரிகுளம் உள்ளது. இந்த குளத்தில் கொள்ளிடம் குடிநீரின் உபரி தண்ணீர் கலப்பதால் ஆண்டு முழுவதும் வற்றாத குளமாக இருந்தது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் குளிப்பதற்கும், பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கரிகுளம் 3 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் குளத்தை சுற்றி கருவேல மரம், செடி, கொடிகள் மற்றும் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி புதர் போல் காட்சியளித்தது. இதனால் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவு வளர்ந்ததால் தண்ணீர் மாசு படிந்து காணப்பட்டது. சம்பந்தபட்ட அதிகாரிகள் கரிகுளத்தை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்த செய்தி “தினத்தந்தி” நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் கரிகுளத்தை பார்வையிட்டார். இதை தொடர்ந்து பொக்லின் எந்திரம் மூலம் பணியாளர்கள் குளத்தை தூர்வாரினர். இதையடுத்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட “தினத்தந்தி நாளிதழுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story