குளச்சலில் துணிகரம் வீடுபுகுந்து பிளஸ்–2 மாணவியிடம் 2½ பவுன் நகை பறிப்பு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு


குளச்சலில் துணிகரம் வீடுபுகுந்து பிளஸ்–2 மாணவியிடம் 2½ பவுன் நகை பறிப்பு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 16 July 2019 10:15 PM GMT (Updated: 16 July 2019 4:32 PM GMT)

குளச்சலில் வீடு புகுந்து பிளஸ்–2 மாணவியிடம் 2½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குளச்சல்,

குளச்சல், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஜாண் பிரமாஷ் (வயது 52), மீன்பிடி தொழிலாளி. இவருடைய மகள் கரிஷ்மாசுதி (17). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு ஜாண் பிரமாஷ் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தனர். அப்போது, ஒரு மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த கரிஷ்மாசுதியின் காலில் கிடந்த 2½ பவுன் தங்க கொலுசை பறித்தார்.

அப்போது, திடீரென கண்விழித்த மாணவி சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்தனர். உடனே, அந்த நபர் தங்க கொலுசுடன் தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து ஜாண் பிரமாஷ் மற்றும் அக்கம் பக்கத்தினர் கொள்ளையனை அப்பகுதி முழுவதும் தேடினர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் இதுகுறித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

 மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் திருடனின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.

Next Story