முத்துப்பேட்டையில் மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்ததால் பரபரப்பு போலீஸ் குவிப்பு


முத்துப்பேட்டையில் மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்ததால் பரபரப்பு போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 16 July 2019 10:30 PM GMT (Updated: 16 July 2019 6:45 PM GMT)

முத்துப்பேட்டையில் மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

முத்துப்பேட்டை,

நாகை மாவட்டம் பொரவச்சேரி பகுதியை சேர்ந்த முகமதுபைசன் என்பவர், மாட்டுக்கறி சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பதை வலியுறுத்தும் வகையில் மாட்டுக்கறி சூப் சாப்பிடுவதுபோன்ற வீடியோவை முகநூலில் பதிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் அவரை தாக்கி உள்ளனர்.

இந்த நிலையில் முகமதுபைசன் மீதான தாக்குதலை கண்டித்தும், மாட்டுக்கறி சாப்பிடுவது நல்லது என்பதை வலியுறுத்தியும் முத்துப்பேட்டையில் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்யப்படும் என அறிவித்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் முத்துப்பேட்டை-பட்டுக்கோட்டை சாலை பகுதியில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்தனர்.

இதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்யப்பட்டதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. 

Next Story