ஈரோடு கனிமார்க்கெட்டில் வாரச்சந்தை கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விரிவுபடுத்த வேண்டும்; மாநகராட்சி ஆணையாளரிடம் வியாபாரிகள் கோரிக்கை மனு


ஈரோடு கனிமார்க்கெட்டில் வாரச்சந்தை கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விரிவுபடுத்த வேண்டும்; மாநகராட்சி ஆணையாளரிடம் வியாபாரிகள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 16 July 2019 10:45 PM GMT (Updated: 16 July 2019 10:11 PM GMT)

ஈரோடு கனிமார்க்கெட்டில் வாரச்சந்தை கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் வியாபாரிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு கனிமார்க்கெட் வாரச்சந்தை அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் வியாபாரிகள் மனு கொடுப்பதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

ஈரோடு கனிமார்க்கெட் வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். எங்களது சங்கத்தில் சுமார் 750 வாரச்சந்தை கடைகள் உள்ளன. நாங்கள் நிர்ணயித்த வாடகையை நிலுவை இல்லாமல் செலுத்தி வருகிறோம். தற்போது புதிய வணிக வளாகம் அமைக்கும்போது வாரச்சந்தை கடைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த இடம் போதுமானதாக இல்லை.

வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு 8 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை வாரச்சந்தையை நேரில் ஆய்வு செய்தால், எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடவசதி தெரியவரும். எனவே வாரச்சந்தை கடைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சற்று விரிவுபடுத்தி வழங்க வேண்டும். நாங்கள் வணிகவளாக கட்டுமான பணிக்கும், பொதுமக்களுக்கும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் வியாபாரத்தை செய்து கொள்வோம். எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

Next Story