தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்குகிறது டி.ஐ.ஜி. லோகநாதன் தகவல்


தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்குகிறது டி.ஐ.ஜி. லோகநாதன் தகவல்
x
தினத்தந்தி 17 July 2019 11:00 PM GMT (Updated: 17 July 2019 6:39 PM GMT)

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது என டி.ஐ.ஜி. லோகநாதன் கூறினார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கான காத்திருப்பு அறையை தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புதிய போலீஸ் நிலையம்

கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கும்பகோணம் உட்கோட்டத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறை சென்று திரும்பியவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

திருவிடைமருதூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட திருப்பனந்தாள் போலீஸ் நிலைய சரகத்தில் உள்ள சோழபுரத்தில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு ஒத்திகை

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை இன்று(வியாழக்கிழமை) தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கும்ப கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story