திருமணம் செய்வதாக கூறி உல்லாசம், பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு - தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்குப் பதிவு


திருமணம் செய்வதாக கூறி உல்லாசம், பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு - தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்குப் பதிவு
x
தினத்தந்தி 17 July 2019 11:15 PM GMT (Updated: 17 July 2019 7:54 PM GMT)

திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்து பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த தனியார் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தேவாங்கபுரத்தை சேர்ந்தவர் புனிதா (வயது 37). இவர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 9 ஆண்டு ஆகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விவகாரத்து பெற்று கணவரை பிரித்து வாழ்ந்து வருகிறார். கோவை நாயுடு வீதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் என்பவரது மகன் கிஷோர் (35). இவரும், புனிதா வேலை பார்த்த நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இதனால் அவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. புனிதாவிடம் கிஷோர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இந்த நிலையில் கிஷோர் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு புனிதாவை அழைத்து சென்று, உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. இதனை புனிதாவுக்கு தெரியாமல், செல்போனில் ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார்.

இதையடுத்து கிஷோர், புனிதாவை திருமணம் செய்ய தட்டிக்கழித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் புனிதா திருமணத்திற்கு தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக கிஷோர் மிரட்டி உள்ளார். மேலும் அவரிடம் இருந்து ரூ.56 லட்சத்தை மிரட்டி பறித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து புனிதா பொள்ளாச்சி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், கிஷோர் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் நடைபெற்ற இடம் சென்னை கிண்டி என்பதால் கிண்டி போலீஸ் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்படும் என்று பொள்ளாச்சி போலீசார் தெரிவித்தனர்.

பெண்ணை ஆபாச படம் எடுத்து தனியார் நிறுவன ஊழியர் மிரட்டி பணம் பறித்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story