ஆகஸ்டு 16-ந் தேதி வீராம்பட்டினம் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்


ஆகஸ்டு 16-ந் தேதி வீராம்பட்டினம் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 18 July 2019 10:15 PM GMT (Updated: 18 July 2019 6:17 PM GMT)

வீராம்பட்டினம் தேரோட்டம் ஆகஸ்டு 16-ந் தேதி நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

அரியாங்குப்பம், 

புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 5-வது வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் ஆகஸ்டு 16-ந் தேதி நடக்கிறது. இதில் புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

தேர் திருவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் அரியாங்குப்பத்தில் உள்ள தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தமன், ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீராம்பட்டினம் அறங்காவல் குழுவினர், விழாக்குழுவினர் மற்றும் தேர் திருப்பணிக்குழுவினர் கலந்துகொண்டனர்.

தேரோட்டத்தில் பங்கேற்க வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்குவது, தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது, குற்றங்களை தடுக்க முக்கிய சந்திப்புகள், கோவிலுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக புறக்காவல் நிலையம் அமைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Next Story