பொதுமக்கள் நீர் மேலாண்மை குறித்து போதிய விழிப்புணர்வு பெற்றிடவேண்டும் கலெக்டர் பேச்சு


பொதுமக்கள் நீர் மேலாண்மை குறித்து போதிய விழிப்புணர்வு பெற்றிடவேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 18 July 2019 11:00 PM GMT (Updated: 18 July 2019 7:19 PM GMT)

பொதுமக்கள் நீர் மேலாண்மை குறித்து போதிய விழிப்புணர்வு பெற்றிட வேண்டும் என மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் உமா மகேஸ்வரி பேசினார்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். முகாமில் தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் பேசினார். மேலும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து வருவாய்த்துறையின் சார்பில் 158 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள், 36 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள், 4 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணைகள் உள்பட 293 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்து 9 ஆயிரத்து 324 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி வழங்கி பேசினார்.

குடிநீர் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை

அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு உத்தரவின்படி, பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் வழங்கும் வகையில் குடிநீர் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்பகுதி பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏற்கனவே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருவதுடன், தேவைக்கேற்ப கூடுதல் ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் சாலை மேம்பாடு, பஸ் வசதி, பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் நீர் மேலாண்மை குறித்து போதிய விழிப்புணர்வு பெற்றிட வேண்டும். நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் விவசாயிகள் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை செயல்படுத்தி வரும் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசன திட்டங்களை பயன்படுத்தி குறைவான நீரில் அதிக பரப்பளவில் விவசாயம் செய்வதுடன், வேளாண் அலுவலர்களை அணுகி நிலத்திற்கேற்ற பயிர்களை பயிரிட்டு அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, தாசில்தார் வில்லியம்மோசஸ் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story