புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா


புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா
x
தினத்தந்தி 18 July 2019 11:00 PM GMT (Updated: 18 July 2019 7:22 PM GMT)

புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் மன்னர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி மாணவர்கள் வகுப்பறையில் போதுமான மின்சார வசதி இல்லை. கல்லூரியின் சுற்றுப்புறத்தை சுத்தமான முறையில் பராமரிக்க வேண்டும். கழிப்பறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். அதிகப்படியாக உள்ள தேர்வு கட்டணங்களை குறைக்க வேண்டும். அரசு பஸ்கள் கல்லூரி அருகே நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி உதவித்தொகை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இலவச பஸ்பாஸ் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக நாட்டுநலப்பணி திட்டத்திற்கு அழைத்து செல்லவில்லை. எனவே இந்த ஆண்டு நாட்டுநலப்பணி திட்டத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். மாணவர்களுக்கு போதுமான தண்ணீர் வசதி இல்லை. கிடைக்கும் தண்ணீர் சரியான முறையில் சுத்திகரிக்கப்படுவதில்லை என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறு முகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று கல்லூரி முன்பு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story