நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை எரித்து கொன்ற காதலன் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை


நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை எரித்து கொன்ற காதலன் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 18 July 2019 10:45 PM GMT (Updated: 18 July 2019 7:24 PM GMT)

நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை எரித்து கொன்ற காதலன் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி வசாய் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

வசாய்,

பால்கர் மாவட்டம் விரார் கிழக்கு வாகன்பாடா பகுதியில் மனோஜ் (வயது35) என்பவர் தனது காதலியுடன் வசித்து வந்தார். இவர்களுடன் நண்பர் பாபுராவும் (47) தங்கியிருந்தார். இந்தநிலையில் காதலியின் நடத்தையில் மனோஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி வழக்கம்போல மனோஜிக்கு காதலியுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அவர், நண்பர் பாபுராவுடன் சேர்ந்து காதலியை எரித்து கொலை செய்தார்.

இறப்பதற்கு முன் அந்த பெண், பாபுராவ் தன் மீது மண்எண்ணையை ஊற்றியதாகவும், மனோஜ் உடலில் தீ வைத்ததாகவும் மரண வாக்குமூலம் அளித்து இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து இருந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை வசாய் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில் வழக்கை விசாரித்த கோர்ட்டு, பெண்ணை எரித்து கொலை செய்த காதலன் மனோஜ் மற்றும் அவரது நண்பர் பாபுராவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

Next Story