ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது லட்சியம் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற அனுராதா பேட்டி


ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது லட்சியம் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற அனுராதா பேட்டி
x
தினத்தந்தி 18 July 2019 10:45 PM GMT (Updated: 18 July 2019 7:25 PM GMT)

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது லட்சியமாக உள்ளது என்று காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற அனுராதா கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டியை சேர்ந்தவர் அனுராதா. இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் சமோவ் தீவில் உள்ள அபியர் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 87 கிலோ எடைப்பிரிவில் ஸ்னாச் முறையில் 100 கிலோவும், கிளின் அண்ட் ஜெர்க் முறையில் 121 கிலோவும் என 221 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனுராதாவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முன்னாள் மாணவி என்ற அடிப்படையில் அக்கல்லூரி மாணவர்களும் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

உற்சாக வரவேற்பு

இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய அனுராதாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் சார்பில், மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அனுராதா புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கலெக்டர் உமா மகேஸ்வரியிடம் வாழ்த்து பெற்றார். பின்னர் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக சென்ற அனுராதாவிற்கு மக்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ஒலிம்பிக்கில் தங்கம்

பின்னர் அனுராதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பல தடைகளை தாண்டி காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது அண்ணன் தனது கல்வியை துறந்து, அம்மா கூலி வேலை செய்து என் சாதனைக்கு வித்திட்டனர். தமிழகத்தில் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வரும் பெண்களுக்கு சாதிப்பது என்பது சவாலாகவே உள்ளது. பல தடைகளை தாண்டித்தான் பெண்கள் சாதிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இதே போன்ற சாதனை மேற்கொண்ட சாந்தி, கோமதி, மாரிமுத்து பிரச்சினைக்கு உள்ளானது ஏன் என்று தெரியவில்லை. அதற்கு அரசியல் காரணமாக கூட இருக்கலாம்.

நான் அடிப்படையான விளையாட்டு உபகரணங்களில் பயிற்சி எடுத்தே காமன்வெல்த்தில் தங்கம் வென்று உள்ளேன். உலகம் தரம் வாய்ந்த உபகரணங்கள் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் நிச்சயம் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது லட்சியமாக உள்ளது. தமிழகத்தில் விளையாட்டு துறையில் சில அடிப்படை வசதிகள் மட்டுமே உள்ளது. உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் இன்னும் பல கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் என்னைப்போல் சாதிப்பார்கள். நான் பின்தங்கிய பகுதியில் இருந்து வந்ததால் வருங்காலங்களில் பின்தங்கிய கிராமப்புற மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டு உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story