வானூர் பகுதியில், தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது


வானூர் பகுதியில், தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது
x
தினத்தந்தி 18 July 2019 10:45 PM GMT (Updated: 18 July 2019 8:18 PM GMT)

வானூர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

வானூர் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இதுதொடர்பாக வானூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார், அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் துருவி, துருவி போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், சங்கராபுரம் அருகே உள்ள உலகலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த ராஜி (வயது 52) என்பது தெரிந்தது.

மேலும் விசாரணையில் இவர் வானூர், கிளியனூர் உள்ளிட்ட பகுதிகளில் 4 வீடுகளில் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்ததும், கொள்ளையடித்த நகைகளை உருக்கி தங்கக்கட்டியாக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ராஜியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 232 கிராம் எடையுள்ள 4 தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ராஜியை வானூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story