தேவாரம் அருகே, தலையில் கல்லைப்போட்டு விவசாயி படுகொலை - மனைவி, கள்ளக்காதலன் கைது
தேவாரம் அருகே தலையில் கல்லைப்போட்டு விவசாயி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
தேவாரம்,
தேனி மாவட்டம் தேவாரம் அடுத்துள்ள தே.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை(வயது 48). விவசாயி. இவரது மனைவி ஜெலீனா (வயது 45). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள்ஆகிறது. குழந்தைகள் இல்லை. கணவனும், மனைவியும் தோட்டத்தில் தங்கி அதை பராமரித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை செல்லத்துரை தோட்டத்து வீட்டில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். அப்போது செல்லத்துரை உடல் நிலை பாதிப்பால் தடுமாறி கீழே விழுந்து இறந்து விட்டார் என்று அவரது மனைவி ஜெலீனா உறவினர் களிடம் கூறினார். ஆனால் செல்லத்துரை சாவில் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் செல்லத்துரை சாவில் சந்தேகம் இருப்பதாக தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து செல்லத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் செல்லத்துரை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
செல்லத்துரையின் பக்கத்து தோட்டத்தில் பண்ணைப்புரத்தை சேர்ந்த சுதாகர்(வயது 29) என்பவர் வேலை செய்து வந்தார். மாலை நேரங்களில் வேலையை முடித்துவிட்டு செல்லத்துரை வீட்டுக்கு சுதாகர் சென்று வந்தார். இதில் ஜெலீனாவுக்கும், சுதாகருக் கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக் காதலாக மாறி அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செல்லத்துரை, மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் ஜெலீனா கோபித்துக்கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் 3 மாதம் கழித்து மீண்டும் செல்லத்துரை மனைவியை அழைத்து வந்தார். இதைத்தொடர்ந்து சுதாகர் மீண்டும் ஜெலீனாவுடன் கள்ளத்தொடர்பு வைத்தார். இதனால் செல்லத்துரை ஆத்திரம் அடைந்து மனைவியை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் செல்லத்துரை உயிருடன் இருந்தால் நாம் உல்லாசமாகவும், நிம்மதியாகவும் இருக்கமுடியாது. இதனால் அவரை கொலை செய்துவிடலாம் என்று இருவரும் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு செல்லத்துரை நன்றாக தூங்கியவுடன் ஜெலீனா சுதாகரை வரவழைத்தார். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து செல்லத்துரையின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தனர். இதையடுத்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இவ்வாறு போலீசாரின் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
இதைத்தொடர்ந்து போலீசார் ஜெலீனா மற்றும் அவரது கள்ளக்காதலனை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் செல்லத்துரையை கொலை செய்ததை ஒப்புகொண்டனர். அதையொட்டி போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story