தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதாக கூறி காரை வாங்கி அடகு வைத்து மோசடி செய்த வாலிபர் கைது


தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதாக கூறி காரை வாங்கி அடகு வைத்து மோசடி செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 July 2019 11:15 PM GMT (Updated: 19 July 2019 7:45 PM GMT)

தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதாக கூறி காரை வாங்கி அடகு வைத்து மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில், அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையை சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 31) என்பவர் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

விருத்தாசலத்தை சேர்ந்த சிலம்பரசன்(31), அசோக்குமார் (35) ஆகியோர் துரைப்பாக்கத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் எனது நண்பர்கள் மூலமாக சிலம்பரசன் எனக்கு அறிமுகமானார். துரைப்பாக்கத்தில் உள்ள பெரிய தனியார் நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு விடுவதால் அதிகளவில் பணம் கிடைக்கும் என்று தொல்லைப்படுத்தி எனது காரை, அதற்குரிய ஆவணங்களுடன் வாங்கி சென்றார்.

இதற்காக 2 மாதங்கள் வாடகையை சரியாக கொடுத்தார். ஆனால் அதன்பிறகு காருக்கான வாடகை பணத்தை தரவில்லை. அசோக்குமார், எனது காரை அடகு வைத்து ரூ.3 லட்சம் பெற்று இருப்பதாக அறிந்தேன். இதனால் சிலம்பரசனிடம் எனது காரை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் சிலம்பரசனும், அசோக்குமாரும் காரை தர மறுத்ததுடன், என்னை மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதுபற்றி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் அடையாறு துணை கமிஷனர் பகலவன், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் லோகநாதன் ஆகியோர் மேற்பார்வையில் துரைப்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கலைசெல்வி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சிலம்பரசன், அசோக்குமார் இருவரும் துரைப்பாக்கம், கண்ணகி நகர், மாதவரம், பள்ளிக்கரணை, கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் அதிக வாடகை தருவதாக கூறி உரிமையாளர்களிடம் இருந்து கார் மற்றும் அவற்றுக்கான ஆவணங்களை வாங்கி பணம் தராமலும், அந்த காரை அடகு வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும் சிலம்பரசன், அசோக்குமார் ஆகியோருக்கு டெல்லிபாபு என்பவர் உடந்தையாக இருப்பதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து சிலம்பரசனை போலீசார் கைது செய்தனர். அடகு வைக்கப்பட்ட 17 கார்களும் மீட்கப்பட்டன.

இந்த வழக்கில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மகனான அசோக்குமார், முன்ஜாமீன் பெற்றுள்ளதால், டெல்லிபாபுவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story