கடன் தொல்லை சம்பந்தமாக கலெக்டரிடம் மனு கொடுக்க விஷம் குடித்து வந்த பெண் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு


கடன் தொல்லை சம்பந்தமாக கலெக்டரிடம் மனு கொடுக்க விஷம் குடித்து வந்த பெண் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 July 2019 10:15 PM GMT (Updated: 19 July 2019 8:30 PM GMT)

கடன் தொல்லை சம்பந்தமாக கலெக்டரிடம் மனு கொடுக்க விஷம் குடித்து வந்த பெண் மயங்கி விழுந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் துறைமுகம் மாலுமியார்பேட்டை திரவுபதி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கனகராஜ். தனியார் பஸ் டிரைவர். இவருடைய மனைவி மதனா (வயது 38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இவர் கடலூர் மாவட்ட கலெக்டரை சந்திப்பதற்காக தனது 2 மகன்களையும் அழைத்து வந்தார்.

அவர் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலை தாண்டி உள்ளே சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் இ்ருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடன் அவரிடம் விசாரித்த போது, கடன் தொல்லையால் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது பற்றி புதுநகர் போலீசார் நடத்திய விசாரணையில், மதனா அதே பகுதியை சேர்ந்த சிலரிடம் ரூ.1 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கி உள்ளார். அதில் பெண் ஒருவரிடம் வாங்கிய கடனை தினந்தோறும் ரூ.1,300 கொடுத்து அடைத்து வந்தார்.

ஆனால் கடந்த மாதம் அந்த பணத்தை அவரால் திருப்பி கொடுக்க முடிய வில்லை. இதனால் அந்த பெண் தான் கொடுத்த கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தார். மதனா வீட்டிலும் கடனை அடைத்து விட்டு வா என்று கூறி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் இது பற்றி கலெக்டரிடம் முறையிட்டு, மனு கொடுத்து தீர்வு காண நினைத்தார்.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே வைத்து விஷம் குடித்து விட்டு வந்தது தெரிய வந்தது. இருப்பினும் இது பற்றி கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story