வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை: வக்கீலுக்கு ஆயுள் தண்டனை


வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை: வக்கீலுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 19 July 2019 11:15 PM GMT (Updated: 19 July 2019 9:59 PM GMT)

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

திருப்பூர்,

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் சரவணராஜ்குமார்(வயது 36). வக்கீல். இவருக்கும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நத்தக்காடையூர் வாவிபாளையத்தை சேர்ந்த யமுனாதேவிக்கும்(28) கடந்த 4–3–2012 அன்று இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து யமுனாதேவி கோவையில் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். திருமணத்தின் போது யமுனாதேவியின் தந்தை அர்ஜூனன், 75 பவுன் நகை, ஒரு காரை வரதட்சணையாக கொடுத்தார்.

அதன்பிறகும் சரவணராஜ்குமார் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் புதிதாக வீடு வாங்குவதற்காக ரூ.40 லட்சத்தை பெற்றோரிடம் வாங்கி வருமாறு யமுனாதேவியை அவர் சித்ரவதை செய்துள்ளார். பின்னர் யமுனாதேவி தனது தந்தை வீட்டுக்கு சென்றார்.

இந்தநிலையில் கடந்த 19–6–2013 அன்று தந்தை வீட்டில் இருந்த யமுனாதேவி மனமுடைந்து கழிவறைக்கு சென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அர்ஜூனன் அளித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் சரவணராஜ்குமார் மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்தனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, மனைவியை வரதட்சணை கொடுமை செய்த குற்றத்துக்காக சரவணராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.


Next Story