போடி அருகே மலைக்கிராமத்தில் ஆற்று தண்ணீரை கொண்டு செல்வதில் மோதல்; தொழிலாளி மீது துப்பாக்கி சூடு, மைத்துனர் கைது


போடி அருகே மலைக்கிராமத்தில் ஆற்று தண்ணீரை கொண்டு செல்வதில் மோதல்; தொழிலாளி மீது துப்பாக்கி சூடு, மைத்துனர் கைது
x
தினத்தந்தி 20 July 2019 11:45 PM GMT (Updated: 20 July 2019 7:01 PM GMT)

போடி அருகே ஆற்று தண்ணீரை கொண்டு செல்வதில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட அவருடைய மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.

போடி,

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் முதுவாக்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 60). இவர் மலைப்பகுதிகளில் உள்ள தோட்டங்களில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் ஊர் சமுதாய தலைவராகவும் இருந்து வருகிறார்.

இவருடைய மைத்துனர் சக்திவேல் (வயது 45). இவர்கள் இருவரின் வீடும் அருகருகே அமைந்துள்ளது. சக்திவேல் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக அருகில் ஓடும் ஆற்றில் இருந்து தண்ணீரை குழாய் மூலம் பவுன்ராஜ் வீடு வழியாக கொண்டு சென்றுள்ளார்.

இதற்கு பவுன்ராஜ் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் தனது வீட்டில் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து பவுன்ராஜை நோக்கி சுட்டார். இதில் அவருடைய இடதுபுற கழுத்து, தோள்பட்டையில் படுகாயம் ஏற்பட்டது.

துப்பாக்கி சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தனர். அங்கு பவுன்ராஜ் ரத்தக் காயத்துடன் மயங்கி கிடந்தார். உடனே இதுகுறித்து குரங்கணி போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இந்த கிராமத்துக்கு சாலை வசதியோ, போக்குவரத்து வசதியோ கிடையாது என்பதால், படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் டோலி கட்டி குரங்கணிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து அவர் போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் தேனியில் இருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதுவாக்குடிக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சக்திவேலை கைது செய்ய போடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், முதுவாக்குடி மலைப்பகுதியில் பதுங்கி இருந்த சக்திவேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிக்கு உரிமம் கிடையாது. அந்த துப்பாக்கி அவருக்கு எப்படி கிடைத்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘கைப்பற்றப்பட்ட துப்பாக்கி நாட்டுத்துப்பாக்கி வகையை சேர்ந்தது. இதற்கு உரிமம் இல்லை. இந்த துப்பாக்கி எப்படி கிடைத்தது என்று சக்திவேலிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குரங்கணி மலைப்பகுதியில் அந்த துப்பாக்கியை கண்டெடுத்ததாக கூறி உள்ளார். வேட்டையாட வந்த யாரேனும் துப்பாக்கியை விட்டுச் சென்று இருக்கலாம் என்றும், அதை இவர் எடுத்து வந்து இருக்கலாம் என்றும் தெரிய வருகிறது. அதே நேரத்தில் இந்த துப்பாக்கியை அவர் வைத்துள்ளது அக்கம்பக்கத்து வீடுகளில் கூட தெரியாது என்கின்றனர். எனவே, இதை அவர் வீட்டில் மறைத்தே வைத்துள்ளார். இருப்பினும் இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.

நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதியாக கருதப்படும் முதுவாக்குடி பகுதியில் சக்திவேல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த சம்பவம் கிராம மக்கள் மற்றும் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story