பேராவூரணியில் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி


பேராவூரணியில் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
x
தினத்தந்தி 20 July 2019 11:00 PM GMT (Updated: 20 July 2019 8:26 PM GMT)

பேராவூரணியில் சுவர் இடிந்து விழுந்து பெண் பலியானார்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் வீரையன். இவருடைய மனைவி காளியம்மாள்(வயது 56). இருவரும் கூலி தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இவர்களுடைய கூரை வீட்டில் பழுதுபார்க்கும் பணி நடந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் ஈரமாகி இருந்த வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் காளியம்மாள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அதிகாரி சாந்தகுமார் உள்ளிட்டோர் சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இதுதொடர்பாக பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான காளியம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story