தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் நோய் பாதிப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் நோய் பாதிப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 22 July 2019 10:45 PM GMT (Updated: 22 July 2019 8:09 PM GMT)

தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்றும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரியும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். அப்போது செந்தண்ணீர்புரம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் செந்தண்ணீர்புரம் வட பகுதி கண்ணகி தெருவில் 60 வருடங்களாக குடியிருந்து வரும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் மண்ணச்சநல்லூர் தாலுகா ஓமாந்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஓமாந்தூர் புலிவலம் சாலையில் தனியார் கழிவு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் கடந்த ஒரு வருடமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையினால் பொதுமக்களுக்கு நெஞ்சு எரிச்சல், தோல்வியாதி போன்றவை ஏற்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். ஓமாந்தூரில் நடந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமிலும் மனு கொடுத்து உள்ளோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது அந்த நிறுவனம் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்து உள்ளதாக அறிகிறோம். பொதுமக்களின் உடல்நலம் கருதி அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

பூங்கா இடம் ஆக்கிரமிப்பு

துறையூர் தாலுகா பச்சமலை வண்ணாடு புதூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் தண்ணீர் பிரச்சினை கடுமையாக இருப்பதால் புதிதாக கிணறு அமைத்து தர வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர். லால்குடி பேரூராட்சிக்கு சொந்தமான, பூங்காவுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார். இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் சீர் குலைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரி லால்குடி தாலுகா சிறுதையூர் கண்ணன் நகர் அன்னை நகர் நல சங்கத்தினர் சார்பில் சங்க செயலாளர் ஜான் மதலை மனு கொடுத்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் வந்தவர்கள், திருவெறும்பூர் தாலுகா வேங்கூரில் குடிநீர் பிரச்சினை நிலவி வருவதால், அதற்கு நிரந்தர தீர்வு காண ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

மாட்டு வண்டி தொழிலாளர்கள்

திருவெறும்பூர் ஒன்றியம் மணல் மாட்டு வண்டி சங்கத்தினர் அதன் தலைவர் பாலமாதவன் தலைமையில் வந்து கொடுத்த மனுவில், கீழ முல்லைக்குடி பகுதியில் செயல்பட்டு வந்த மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த மணல் குவாரியை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

முசிறி தாலுகா பூலாஞ்சேரி கிராமம் பாப்பாபட்டியில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு செல்லும் வாகனங்களால் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் கல்குவாரி வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி பாப்பாபட்டி கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

ஆசிரியை புகார்

தனியார் கல்லூரி ஆசிரியை ஒருவர், தான் தங்கி இருக்கும் வீட்டில் குளியல் அறை உள்ளிட்ட இடங்களில் கேமரா வைத்து படம் பிடித்து அதனை சமூக வலைத்தளத்தில் பரவ விடுவதாக ஒரு வாலிபர் மிரட்டி வருவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார்.

Next Story