ஆண்டிப்பட்டியில் பயங்கரம்: அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகி எரித்து கொலை


ஆண்டிப்பட்டியில் பயங்கரம்: அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகி எரித்து கொலை
x
தினத்தந்தி 22 July 2019 11:30 PM GMT (Updated: 22 July 2019 11:01 PM GMT)

ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகி எரித்து கொலை செய்யப்பட்டார்.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சி 5-வது வார்டு குமாரபுரத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை. அவருடைய மகன் சதீஸ்குமார்(வயது 26). இவர், அ.தி.மு.க. ஒன்றிய மாணவரணி துணை செயலாளராக இருந்து வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், மதுரைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு தனது காரில் புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்தநிலையில் நேற்று காலையில் டி.வி.ரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள அவருடைய தோட்டத்தில் சதீஸ்குமாரின் கார் நின்று கொண்டிருந்தது. அதன் அருகே உடல் எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சரவண தெய்வேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அங்கு எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது சதீஸ்குமார் என்று தெரியவந்தது. அவரை மர்ம நபர்கள் எரித்து கொலை செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் பரவியதையடுத்து சதீஸ்குமாரின் உறவினர்களும், அப்பகுதி மக்களும் அங்கு திரண்டனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது. அங்கு மோப்பம் பிடித்த நாய், சம்பவ இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு காரில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இதற்கிடையே கொலை நடந்த பகுதியில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரில் வந்து பார்வையிட்டு, போலீசாரிடம் விவரங்களை கேட்டறிந்தார். சதீஸ்குமாரின் உடல் கிடந்த இடத்தில் இருந்த அவருடைய 2 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர். அதில் கடைசியாக வந்திருந்த அழைப்புகள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அவருடைய உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக் காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். இந்த கொலை குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்விரோதம் அல்லது தொழில் போட்டி காரணமாக சதீஸ்குமார் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரைக்கு செல்வதாக கூறி சென்ற சதீஸ்குமாரை கொலையாளிகள் கடத்தி சென்று வேறு இடத்தில் வைத்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை காரில் கொண்டு வந்து அவருடைய தோட்டத்தில் வைத்து எரித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த கொலையில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story