மும்பை பெருநகர பகுதியில் மேலும் 3 மெட்ரோ ரெயில் வழித்தடம் : மாநில மந்திரி சபை ஒப்புதல்


மும்பை பெருநகர பகுதியில் மேலும் 3 மெட்ரோ ரெயில் வழித்தடம் : மாநில மந்திரி சபை ஒப்புதல்
x
தினத்தந்தி 23 July 2019 11:01 PM GMT (Updated: 23 July 2019 11:01 PM GMT)

மும்பை பெருநகர பகுதியில் மேலும் 3 மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் திட்டங்களுக்கு மாநில மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

மும்பை,

மும்பை பெருநகர எல்கைக்குட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாகவும் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில், புறநகர் காட்கோபர் - வெர்சோவா இடையே தற்போது மெட்ரோ ரெயில்கள் இயங்கி வருகின்றன.

கொலபா-பாந்திரா-சீப்ஸ், வடலா-காசர்வடவலி, தகிசர் - டி.என். நகர், அந்தேரி கிழக்கு - தகிசர் கிழக்கு உள்ளிட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், 10-வது மெட்ரோ வழித்தடம் தானே - காய்முக் - சிவாஜி சவுக் இடையே 11 கி.மீ. தூரத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவிலும், 11-வது மெட்ரோ வழித்தடம் வடலா - மும்பை சி.எஸ்.எம்.டி. இடையே சுரங்க மார்க்கமாக 14 கி.மீ. தூரத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி செலவிலும், 12-வது மெட்ரோ ரெயில் வழித்தடம் கல்யாண் - நவிமும்பை தலோஜா இடையே 25 கி.மீ. தூரத்துக்கு ரூ.11 ஆயிரம் கோடி செலவிலும் செயல்படுத்தப்பட உள்ளன.

மேற்படி மும்பை பெருநகர பகுதியில் அமைய உள்ள இந்த மூன்று மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கும் நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடந்த மாநில மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Next Story