வியாபாரத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ரூ.75 லட்சம் மோசடி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்


வியாபாரத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ரூ.75 லட்சம் மோசடி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
x
தினத்தந்தி 24 July 2019 11:00 PM GMT (Updated: 24 July 2019 7:23 PM GMT)

வியாபாரத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ரூ.75 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை போலீஸ் சூப்பிரண்டிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் மானம்புச்சாவடி வைக்கோல்காரத்தெருவை சேர்ந்த ஹக்கீம் தலைமையில் 25 பேர் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை காந்திஜிசாலையில் இயங்கி வந்த ஒரு கடையின் மேலாளர் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 3 பேர் சேர்ந்து ஆசை வார்த்தை கூறி அவர்களுடைய குழுமத்தில் வியாபார முதலீடு செய்தால் மாதந்தோறும் லாபத்தில் குறிப்பிட்ட பங்குதொகை தருவதாகவும், முதலீடு தொகையை கேட்கும் பட்சத்தில் 1 மாத காலத்தில் திரும்ப தருவதாகவும் கூறினர்.

போலீசில் லாரி ஒப்படைப்பு

அதன்படி நாங்கள் 16 பேர் ரூ.75 லட்சம் கொடுத்துள்ளோம். அதற்கான ஒப்பந்தமும் செய்து கொண்டோம். ஆனால் ஒப்பந்தத்தில் கூறியவாறு எந்த தொகையும் தரவில்லை. எங்களுடைய பணத்தை திருப்பி கேட்ட போதும் ஏமாற்றி வந்தனர். தற்போது அவர்கள் கடையை பூட்டி விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் குடியிருந்த வீட்டை காலி செய்வதற்காக கண்டெய்னர் லாரியை எடுத்து வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாங்கள் சென்று பணத்தை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறினோம். அப்போது அவர்கள் வாள் போன்ற கூர்மையான ஆயுதத்தை காட்டி பணம் கேட்டால் கொலை செய்து விடுவோம் என்று கூறி லாரியை விட்டு விட்டு சென்றுவிட்டனர். உடனே நாங்கள் லாரியை பிடித்து மருத்துவக்கல்லூரி போலீசில் ஒப்படைத்துள்ளோம். எனவே எங்களை ஏமாற்றி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் பணம் திரும்ப கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

Next Story