செஞ்சியில் தூக்கு கயிறுடன் திருவோடு ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் பயிர் கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை


செஞ்சியில் தூக்கு கயிறுடன் திருவோடு ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் பயிர் கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 24 July 2019 7:49 PM GMT (Updated: 24 July 2019 7:49 PM GMT)

பயிர் கடனை தள்ளுபடி செய்ய கோரி செஞ்சியில் தூக்கு கயிறுடன் திருவோடு ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செஞ்சி,

விழுப்புரம் மாவட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் பயிர் கடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தூக்கு கயிறுடன் திருவோடு ஏந்தியும், பட்டை நாமம் போட்ட அட்டைகளை அணிந்தும் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். மாநில துணை செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட அமைப்பாளர் முருகதாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யாக்கண்ணு, ஒன்றிய அமைப்பாளர்கள் மனோகரன், பார்த்திபன், பூபாலன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ரவி, செஞ்சி பிச்சாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்யவேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் மற்றும் நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி தூர்வார வேண்டும். செஞ்சி பகுதியில் நடைபெறும் குடிமராமத்துப்பணிகளை முறையாக செய்து முடிக்கவேண்டும். கண்டாச்சிபுரம் போலீஸ் நிலைய சரகத்தில் உள்ள சேரானூர் கிராமத்தை அனந்தபுரம் போலீஸ் நிலையத்துடன் இணைக்க வேண்டும்.

கெங்கவரம், கணக்கன்குப்பம் மலையின் இடையே அணை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.

Next Story