உத்திரமேரூர் ஆருகே நடுகல் வீரன் சிலை கண்டுபிடிப்பு


உத்திரமேரூர் ஆருகே நடுகல் வீரன் சிலை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 25 July 2019 10:45 PM GMT (Updated: 25 July 2019 8:07 PM GMT)

உத்திரமேரூர் அருகே நடுகல் வீரன் சிலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அனுமந்தண்டலம் கிராமத்தில் பல்லவர் காலத்தை சேர்ந்த நடுகல் வீரன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் பாலாஜி தலைமையில் யுவராஜ், கோகுல சூர்யா ஆகியோர் இணைந்து அனுமந்தண்டலம் கிராமத்தில் களஆய்வு மேற்கொண்டபோது இந்த சிலையை கண்டறிந்தனர்.

நடுகல் என்பது போரில் வீர மரணம் அடைந்த வீரன் நினைவாக அவனது வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில் அந்த வீரனின் உருவத்தை ஒரு கல் சிற்பமாக செதுக்கி வழிபடும் முறையாகும். இதனை வீரக்கற்கள் என்றும் அழைப்பார்கள். இந்த நடுகல் வீரன் சிலையானது ஊரின் மைதானத்தில் அரச மரத்தடியில் ஒரு பலகை கல் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

80 செ.மீ உயரமும், 65 செ.மீ அகலமும் கொண்ட வீரனது வலக்கை கேடயத்தை ஏந்தியபடியும், இடக்கையானது வாளை உயர்த்தியும் முகமானது வலப்பக்கம் திரும்பியும், கால்கள் சற்று வளைந்து பாதங்கள் இரண்டும் வலப்பக்கம் திரும்பி போருக்கு விரைந்து செல்லும் வீரனைப்போல கம்பீரமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த வீரனது கழுத்தில் அணிகலன், கைகளில் காப்பு, இடையில் அரையாடை, பாதங்களில் வளையங்கள் அலங்கரிக்கின்றன. இதில் கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை. இந்த ஊர் மக்கள் இதனை மதுரை வீரன் என வழிப்படுகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்த வீரன் குலதெய்வமாக உள்ளார். இந்த வீரனின் உருவம், அமைப்பு, வடிவம் இவற்றை வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது 8-ம் நூற்றாண்டின் இறுதி காலமான பல்லவர் காலத்தை சார்ந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய கவுரவ தலைவரும், தமிழக தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியருமான மார்க்சியா காந்தி.

Next Story