புதுக்கடை அருகே துணிகரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு


புதுக்கடை அருகே துணிகரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 25 July 2019 10:15 PM GMT (Updated: 25 July 2019 8:56 PM GMT)

புதுக்கடை அருகே ஆஸ்பத்திரிக்குள் புகுந்து அங்கு சிகிச்சை பெற்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுக்கடை,

புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் பொன்னப்பன். இவருடைய மனைவி ரபேக்காள் (வயது 60). இவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்தன்று அதிகாலை அவர் ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் ஒரு மர்மஆசாமி நடந்து வந்தார். இந்தநிலையில் மர்ம ஆசாமி, ரபேக்காளிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.

நகை பறிப்பு

அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அந்த ஆசாமி, ரபேக்காள் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்தார். உடனே ரபேக்காள் நகையை பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் நின்றவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்ம ஆசாமி ரபேக்காளை தள்ளிவிட்டு நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

பின்னர், இதுகுறித்து ரபேக்காள் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவையும் போலீசார் ஆய்வு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள். ஆஸ்பத்திரிக்குள் புகுந்து நோயாளியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story