போளூரில் துணிக்கடைக்காரர் வீட்டில் ரூ.6¾ லட்சம் நகை-பணம் கொள்ளை


போளூரில் துணிக்கடைக்காரர் வீட்டில் ரூ.6¾ லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 27 July 2019 10:15 PM GMT (Updated: 27 July 2019 6:43 PM GMT)

போளூரில் துணிக்கடைக்காரர் வீட்டில் ரூ.6¾ லட்சம் நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

போளூர், 

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த ரெ.குண்ணத்தூரை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 44). போளூரில் ரெடிமேட் துணிக்கடை வைத்துள்ளார். மேலும் வீட்டு மாடியில் ரெடிமேட் துணிகள் தயாரித்து ஜவுளி கடைகளுக்கு வினியோகம் செய்து வருகிறார். இவரது மனைவி உமாராணி. இவர்களுக்கு பிரியங்கா (22), சினேகா (18) என 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் முருகதாஸ் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் காஞ்சீபுரம் அத்திவரதரை தரிசனம் செய்ய சென்றார்.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 28 பவுன் நகை மற்றும் ரூ.72 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் இருக்கும்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு சென்று மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story