இளைஞர்கள் தடம் மாறி செல்வதற்கு சினிமா- சமூக வலைத்தளங்களே காரணம் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி


இளைஞர்கள் தடம் மாறி செல்வதற்கு சினிமா- சமூக வலைத்தளங்களே காரணம் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
x
தினத்தந்தி 27 July 2019 11:00 PM GMT (Updated: 27 July 2019 7:44 PM GMT)

இளைஞர்கள் தடம் மாறி செல்வதற்கு சினிமா-சமூக வலைத்தளங்களே காரணம் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஞ்ஞானியும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணை தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைய இளைஞர்கள் தடம் மாறி சமூக விரோத செயல்களை செய்யும் அளவுக்கு செல்வதற்கு சினிமா, சமூக வலைத்தளங்கள் தான் காரணம். கடந்த காலங்களில் வந்த சினிமாக்களை பார்த்தவர்கள் அதிலிருந்து நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொண்டு, அதன்படி செயல்பட்டனர். ஆனால் தற்போது வரும் சினிமாக்களில் வரும் காட்சிகள் மற்றும் கருத்துகளை எதிர்மறையாக எடுத்துக்கொண்டு, அதன்படி இளைஞர்கள் செயல்படுகின்றனர். தங்களை சினிமாவில் வரும் காட்சிகளில் உள்ள ஒரு பாத்திரமாகவே நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். அதனால் தான் தற்போது இளைஞர்கள் அதிக அளவில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை மாற்ற வேண்டும்.

செயற்கைகோள்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் சார்பில் அடுத்த மாதம் அரசு பள்ளி மாணவர்களுக்கான செயற்கைகோள் செயல்விளக்கம் குறித்த அறிவியல் சோதனை பயிற்சி செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் வானில் செலுத்தப்படும் செயற்கைகோள்களின் செயல்பாடுகள் மற்றும் அதன் மூலம் நமக்கு கிடைக்கப்பெறும் பயன்கள் அனைத்தும் அதில் இடம் பெற்றிருக்கும். ஆனால் அது உண்மையான செயற்கைகோளாக இருக்காது. குறிப்பிட்ட தூரம் வரை பலூன் மூலம் வானில் இருந்து சில மணி நேரம் அது செயலாற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் செயற்கைகோளின் செயல்பாடுகள் முழுவதையும் அறிந்திட முடியும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன், புதுச்சேரி மாநில போலீஸ் உயர் அதிகாரி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story