கேரளாவில் மீன்பிடி தடை காலம் எதிரொலி: நாகையில் மீன்கள் விலை உயர்வு நெத்திலி வரத்து அதிகரிப்பு


கேரளாவில் மீன்பிடி தடை காலம் எதிரொலி: நாகையில் மீன்கள் விலை உயர்வு நெத்திலி வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 28 July 2019 11:00 PM GMT (Updated: 28 July 2019 5:50 PM GMT)

கேரளாவில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதன் எதிரொலியாக நாகையில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.

நாகப்பட்டினம்,

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் கடந்த மாதம் (ஜூன்) 14-ந் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதனால் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். மீன்பிடி தடை காலத்துக்கு பின்னர் அதிகளவில் மீன்கள் சிக்கும் என மீனவர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், குறைவான அளவிலேயே மீன்கள் சிக்கி வருவதால், மீனவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

ஆடி மாதம் என்பதால் அசைவ உணவான மீன் விற்பனையும் சற்று மந்தமாகவே உள்ளதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். கேரள மாநிலத்தில் தற்சமயம் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால், நாகையில் பிடிபடும் மீன்கள் கேரளாவுக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதன் எதிரொலியாக நாகை பகுதிகளில் மீன் விலை உயர்ந்து காணப்படுகிறது.

இதுகுறித்து நாகை அக்கரைப்போட்டை மீன் இறங்கு தளத்தில் மீன்விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறியதாவது:-

தேவை அதிகரிப்பு

கேரள மாநிலத்தில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால், அங்கு மீன் தேவை அதிகரித்து உள்ளது. தற்போது நாகையில் இருந்து கேரள மாநிலத்துக்கு மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஏற்றுமதி ரகங்களான வஞ்சிரம், வாவல், பாறை உள்ளிட்ட மீன்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.500-க்கு விற்பனையாகிறது. ரூ.500-க்கு விற்ற வாவல் ரூ.620-க்கும், ரூ.250-க்கும் விற்ற பாறை மீன் ரூ.300-க்கும், ரூ.140-க்கு விற்ற ஓரா ரூ.170-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கானாங்கெழுத்தி மீன் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ரூ.110-க்கு விற்பனையாகிறது.

இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

நெத்திலி வரத்து அதிகரிப்பு

நாகை பகுதிகளில் தடை காலம் முடிந்ததில் இருந்தே மீன்கள் குறைவாக பிடிபட்டு வந்த நிலையில், விற்பனைக்காக தற்போது கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதால், உள்ளூர் தேவைக்கான மீன்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த சில நாட்களாக நாகையில் நெத்திலி மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. அதன் விலை ரூ.150-ல் இருந்து ரூ.100 ஆக குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story