மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்


மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 28 July 2019 10:15 PM GMT (Updated: 28 July 2019 7:46 PM GMT)

மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை,

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரசு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் உதவி உபகரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிந்து அவர்கள் வருவாயை பெருக்கி கொள்ளும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குள் கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத, வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள், மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியின் தாய்மார்களுக்கும் அரசால் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் ஆண்டுதோறும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பிக்கலாம்

மேற்படி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் இலவசமாக பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை நகல், மார்பளவு புகைப்படம், கல்வி தகுதி சான்று அல்லது வயது சான்று மற்றும் தையல் சான்று ஆகிய சான்றுகளுடன் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story