போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும்போது தன்னம்பிக்கையுடன் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்


போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும்போது தன்னம்பிக்கையுடன் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்
x
தினத்தந்தி 28 July 2019 11:00 PM GMT (Updated: 28 July 2019 7:55 PM GMT)

போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும்போது தன்னம்பிக்கையுடன் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்ட பொதுநூலகத்துறை சார்பில் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4, கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களின் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. இதில் போட்டித்தேர்வுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வாசகர் வட்ட தலைவர் சங்கர் வரவேற்றார். மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

தன்னம்பிக்கையுடன்...

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கலந்து கொண்டு, மாணவ- மாணவிகளுக்கு போட்டித்தேர்வுக்கான புத்தகங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தற்போதைய காலக்கட்டத்தில் பட்டபடிப்பு மட்டும் மாணவர்களுக்கு போதுமானது அல்ல. போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியை முறையாக எடுத்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்றால் தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர முடியும். பல வீடுகளில் பெண்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கு வழிகாட்டுதல் இல்லாத சூழலில், நூலகங்களில் நடத்தப்படும் பயிற்சியினை பயன்படுத்தி அரசு பதவிகளை அடைய வேண்டும். வாழ்க்கையில் மகிழ்ச்சி, வருத்தம், துன்பம் போன்றவை மாறிமாறி வரும். அதனை சமமாக பார்க்கும் மனநிலை அனைவருக்கும் வர வேண்டும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் சமயங்களில் பல்வேறு புறச்சூழ்நிலைகளில் நமக்கு சவாலாக இருக்கும். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் தன்னம்பிக்கையுடன் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணன், மாவட்ட கல்வி அதிகாரிகள் சிவராமன் (கரூர்), கபீர் (குளித்தலை), எழுத்தாளர் மாதவன், பட்டதாரி ஆசிரியர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கரூர் கிளை நூலகர் மோகனசுந்தரம் நன்றி கூறினார்.

Next Story