மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ராணுவ வீரர் பலி மயிலாடுதுறை அருகே பரிதாபம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ராணுவ வீரர் பலி மயிலாடுதுறை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 30 July 2019 10:15 PM GMT (Updated: 30 July 2019 8:44 PM GMT)

மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் ராணுவ வீரர் பலியானார்.

குத்தாலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் சன்னதி தெருவை சேர்ந்த வீரசெல்வம் மகன் அருண்பிரசாத்(வயது 36). இவர், இந்திய ராணுவத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் அருண்பிரசாத் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் மேலமங்கநல்லூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

பொறையாறு-மங்கநல்லூர் சாலையில் சென்றபோது எதிரே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள், அருண்பிரசாத் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அருண்பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக அருண்பிரசாத் மனைவி கல்பனா(35) கொடுத்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சிங்காரவேலு மற்றும் போலீசார், விபத்தை ஏற்படுத்திய குத்தாலம் அருகே கடலங்குடி மெயின் ரோட்டை சேர்ந்த அருணாசலம் மகன் அய்யப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story