போச்சம்பள்ளி தாலுகாவில் ரூ.18 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணிகள் - கலெக்டர் நேரில் ஆய்வு


போச்சம்பள்ளி தாலுகாவில் ரூ.18 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணிகள் - கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 30 July 2019 11:30 PM GMT (Updated: 30 July 2019 11:30 PM GMT)

போச்சம்பள்ளி தாலுகாவில் ரூ.18 கோடியே 8 லட்சம் மதிப்பில் தடுப்பணைகள் அமைக்கும் பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாரூர் கிராமம் அரசம்பட்டி, பென்டரஅள்ளி கிராமம் அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு ரூ.18 கோடியே 8 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் நேற்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரால் நீர் வள ஆதாரத்துறை சார்பில் தடுப்பணை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் கிராமம் அரசம்பட்டியில் ரூ. 8 கோடியே 84 லட்சம் மதிப்பில் தடுப்்பணை கட்டப்படுகிறது. இந்த தடுப்பணையின் நீளம் 145 மீட்டர், உயரம் 1.50 மீட்டர் மற்றும் 5.21 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இத்தடுப்பணை மூலம் பாரூர், அரசம்பட்டி மற்றும் பண்ணந்தூர் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள 84 பாசன கிணறுகளின் நிலத்தடி நீர் உயர்த்தப்பட்டு 508 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் இந்த தடுப்பணையை சுற்றி 6 கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள் மூலம் 224 கிராமங்களில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல பென்டரஅள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ 9 கோடியே 24 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டப்படுகிறது. தடுப்பணையின் நீளம் 145 மீட்டர், உயரம் 1.50 மீட்டர் மற்றும் 3.56 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இத்தடுப்பணை மூலம் பென்டரஅள்ளி, கால்சானூர், கொங்கரப்பட்டி, கருவேலம்பட்டி மற்றும் இருமத்தூர் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள 34 பாசன கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டம்் உயர்த்தப்பட்டு 1,107 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் இந்த தடுப்பணையை சுற்றி அமைந்துள்ள 2 ஆழ்துளை கிணறுகளின் மூலம் 3 கிராமங்களிலுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த 2 தடுப்பணைகளுக்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் பணிகளை முழுமையாக முடித்து பொதுமக்கள் மற்றும் விவசாய நிலத்திற்கும் தண்ணீர் கிடைக்கும் வகையில் நிலத்தடி நீரை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பொதுமக்கள் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் மூலம் 150-க்கும் மேற்பட்ட ஏரிகள் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய், நீர் வெளியேற்றும் கால்வாய் தூர் வாரும் பணிகள் நடைபெறுகிறது. பொதுப்பணித்துறை நீர் வள நில வளத்திட்டத்தின் கீழ் தளிஅள்ளி கிராமத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் நீர் வரத்து கால்வாய் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.6 கோடியே 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பென்டரஅள்ளி - கம்பைநல்லூர் மேம்பாலத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி பொறியாளர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், போச்சம்பள்ளி தாசில்தார் முனுசாமி, வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story