தஞ்சை அருகே என்ஜின் பழுதானதால் பயணிகள் ரெயில் நடுவழியில் நிறுத்தம் 4 ரெயில்கள் 2½ மணி நேரம் தாமதம்


தஞ்சை அருகே என்ஜின் பழுதானதால் பயணிகள் ரெயில் நடுவழியில் நிறுத்தம் 4 ரெயில்கள் 2½ மணி நேரம் தாமதம்
x
தினத்தந்தி 1 Aug 2019 10:30 PM GMT (Updated: 1 Aug 2019 7:16 PM GMT)

தஞ்சை அருகே பயணிகள் ரெயில் என்ஜின் பழுதானதால், 4 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, 2½ மணி நேர தாமதத்துக்கு பிறகு இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

தஞ்சாவூர்,

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து திருச்சிக்கு தினமும் காலை 6.15 மணிக்கு பயணிகள் ரெயில் புறப்படும். இந்த ரெயில் கும்பகோணம் வழியாக தஞ்சைக்கு காலை 7.55 மணிக்கு வந்து திருச்சிக்கு 9.10 மணிக்கு சென்றடையும். இது அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

அதன்படி நேற்று காலை 6.15 மணிக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் தஞ்சையை அடுத்த திட்டை - பசுபதிகோவில் ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்த போது என்ஜின் திடீரென பழுதானது. இதனால் ரெயில் அங்கேயே நடுவழியில் நிறுத்தப்பட்டது.

ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை - தஞ்சை வந்த பயணிகள் ரெயில் பண்டரவாடையிலும், மயிலாடுதுறை - திருச்சி விரைவு ரெயில் கும்பகோணம் ரெயில் நிலையத்திலும், திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரெயில் தஞ்சை ரெயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டது.

பின்னர், திருச்சியிலிருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு, பழுதான ரெயில் என்ஜினோடு பொறுத்தப்பட்டது. அதன் பின்னர் ரெயில் புறப்பட்டது. இதனால் 2½ மணி நேரம் நான்கு ரயில்களும் காலதாமதமாக இயக்கப்பட்டது. இதனால் அந்த ரயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Next Story