உயிருக்கு போராடிய 2 மாத குழந்தையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்கள் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்

உயிருக்கு போராடிய 2 மாத குழந்தையை காப்பாற்றுவதற்காக தேனியில் இருந்து கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு 2 மணி 55 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சென்றது. ஆம்புலன்ஸ் டிரைவர்களின் கூட்டு முயற்சியால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
தேனி,
கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தசாமி. இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு 2 மாத ஆண் குழந்தை உள்ளது.
ஆர்த்தி தேனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து இருந்தார். சில நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, வலிப்பு வந்துள்ளது. உடனே அவர்கள் குழந்தையை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர்கள் குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை அளித்துள்ளனர். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அந்த குழந்தை உயிருக்கு போராடியது.
மேல் சிகிச்சை அளிப்பது தொடர்பாக குழந்தையின் பெற்றோர்கள் விசாரித்தபோது, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இதற்கான சிகிச்சை வசதி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை கோவைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப் போவதாக டாக்டர்களிடம், குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஆனால், குழந்தையை சாதாரண ஆம்புலன்சில் கொண்டு சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், இன்குபேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்சில் தான் கொண்டு செல்ல வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து ஆர்த்தியின் அண்ணன் ஸ்ரீகாந்த், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டார். கோவை, சென்னை பகுதிகளில் தான் இதுபோன்ற வசதியுடன் கூடிய தனியார் ஆம்புலன்ஸ் கிடைக்கும் என்று கூறியதோடு, அதற்கு அதிக வாடகையும் கேட்டுள்ளனர். பின்னர், அவர் சின்னமனூர் அருகே சின்னராமகவுண்டன்பட்டியை சோந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் சதீஷ்குமார் என்பவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். தங்களிடம் ரூ.19 ஆயிரம் உள்ளதாகவும், அந்த தொகைக்கு ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து சதீஷ்குமார், கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து இன்குபேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்ததுடன், அவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்துவிட்டார். கடந்த 31-ந்தேதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.
குழந்தையை தாமதமின்றி கோவைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதிக நேரம் ஆனால் மீண்டும் மூச்சுத்திணறல் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டது. செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணம் தாமதம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக சதீஷ்குமார், தேனி, திண்டுக்கல் பகுதிகளில் உள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிலருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள், தகவலை தமிழ்நாடு ஆம்புலன்ஸ் என்ற வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளனர்.
பின்னர் இந்த தகவல் சுற்றுலா வாகன டிரைவர்களுக்கான வாட்ஸ் அப் குழுக்களிலும் பகிரப்பட்டது. இதைப் பார்த்த திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சுற்றுலா வாகன டிரைவர்கள் ஆங்காங்கே நின்றுகொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்தை சீரமைத்தனர். அத்துடன், ஆங்காங்கே இந்த ஆம்புலன்சுக்கு முன்பாக அந்தந்த பகுதியை சேர்ந்த சில ஆம்புலன்சுகளும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தபடி தடையின்றி செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தன.
சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இந்த பயணம் அமைந்தது. இதற்கிடையே இந்த தகவல் அறிந்ததும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசாரும் ஆம்புலன்சுக்கு முன்பாக பயணம் செய்து அந்த உயிர் காக்கும் பயணத்தில் தடங்கல் ஏற்படாமல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
மாலை 6.10 மணிக்கு அந்த ஆம்புலன்ஸ் கோவை தனியார் மருத்துவமனைக்கு சென்றது. சுமார் 210 கிலோமீட்டர் தூரத்தை 2 மணி 55 நிமிடத்தில் கடந்துள்ளனர்.
உயிருக்கு போராடிய குழந்தை அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டது. தற்போது அந்த குழந்தை பொது வார்டுக்கு மாற்றப்பட்டு நல்ல நிலையில் உள்ளதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்.
இந்த ஆம்புலன்சை கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், மனதுமங்கலம் பகுதியை சேர்ந்த ஜாபர் அலி (31) என்பவர் ஓட்டிச் சென்றார். இதில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த அஸ்வின்சந்த் (27) என்பவர் மருத்துவ உதவியாளராக உடன் சென்றார். அவர்களுக்கும், வழிநெடுகிலும் உதவிய ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் சுற்றுலா வாகன டிரைவர்களுக்கும் குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் நன்றி தெரிவித்தனர்.
குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் சுற்றுலா வாகன டிரைவர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட இந்த முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
Related Tags :
Next Story






